பா. சக்திவேல்

Name

Email *

Message *

Monday 5 September 2016

எழுத்தறிவித்தவன் இறைவன்

எழுத்தறிவித்தவன் இறைவன்
வனத்தில் பழங்கள் பல்லுயிர்க்கும் உணவாவதோடு செறிவுள்ள தன் புதிய இனத்தை விதை மூலம் பரவச் செய்கிறது. காந்தம் தன்னோடு சேர்ந்த இரும்புத் துண்டையும் காந்தமாக்கல் போல, அகிலம் தோன்றிய முதல் ஒளி வீசும் பகலவன் படுகதிர் பட்ட பொருளும் பிரகாசிப்பது போல, குணமிலோரும் முறையான குருவை பெறுவாராயின் குவளயம் போற்றுவோராய் உயர்வர். அதனால்தான் ஒளவையார்
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குச்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு  (மூதுரை)
என கற்றோர்களை பெரிதான இடத்தில் வைத்தார். புவிச்சக்கரவர்த்தியை விட கவிச்சக்கரவர்த்தியே உயர்ந்தோர் என புகழ்ந்தார். வள்ளுவரும் ஒரு படி மேற்சென்று
“கற்றாருள் கற்றார் எனப்படுவார் கற்றார்முன்
கற்ற செலச் சொல்லுவார்”
படித்தவருள்ளெல்லாம் படித்தவர் என்பவர் கற்றோர் கூடியுள்ள அரங்கில் செல்லும்படியாகவும் , சொல்லும் படியாகவும் தான் கற்றவற்றை எடுத்துரைக்க வல்லோர் என இலக்கணம் கூறினார். குருவில்லாமல் பெறும் ஞானம் உருவில்லாமல் உலவும் உயிருக்கு சமானம். அது துடுப்பில்லாமல் துவண்டு நிற்கும் மரக்கலம் போல செயலின்றி நிற்கும்.
உலகத்தையே வென்றவன் எனப் புகழப் பெற்ற அலெக்ஸாண்டர் தன் முழு பக்தியையும் தனது ஆசிரியருக்கே செலுத்தினான். அவர்தான் உலகிலேயே மிகவும் வசதியான சீடரைக் கொண்ட குரு அரிஸ்டாட்டில். ஒரு நாள் காட்டு வழியில்- குரு காட்டும் வழியில் அவரோடு பேசிக் கொண்டே அலெக்ஸாண்டர் சென்று கொண்டிருந்தார். அதுவரை குருவைப் பின் தொடர்ந்து சென்றவர் சிறிது தூரத்தில் ஒரு காட்டாறு குறுக்கிடுவதைக் கண்டு சட்டென குருவை முந்திக் கொண்டு சென்று ஆற்றில் இறங்கி சிறிது தூரம் கடந்து பின்பு குருவை ஆற்றில் இறங்க சொன்னார்.
குருவிற்கு சந்தேகம் - ஏனப்பா என் பின்னால் வந்த நீ வேகமாக சென்று நீரில் இறங்கினாய் என்றார். அதற்கு அலெக்ஸாண்டர் இந்த காட்டாற்றில் எப்போது வேண்டுமானாலும் நீர் மட்டம் உயரலாம். ஒரு வேளை அப்படி ஏதேனும் நிகழ்ந்து நான் அடித்துச் செல்லப்பட்டு இறந்து போனால் பரவாயில்லை. ஏனெனில் நீங்கள் நினைத்தால் எத்தனை அலெக்ஸாண்டரை வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால் நூறு அலெக்ஸாண்டர் சேர்ந்து முயன்றாலும் உங்களைப் போன்ற ஒரு அரிஸ்டாட்டிலை உருவாக்க முடியாது என்றார்.
மாவீரன் நெப்போலியனைப் பார்த்து நீ யாரால் உருவாக்கப்பட்டவன் என கேட்ட போது நான் ஒரு ஆசிரியரால் உருவாக்கப்பட்டவன் என்றாராம்.
சோர்ந்து நின்ற இளைஞர்களை சேர்ந்து நின்று வீறு கொண்டு எழ வைத்த இளைஞர்களின் எழுச்சி நாயகர் அப்துல் கலாம், தான் அதிபராக இருந்த போதும் தன் ஆசியரைத் தேடிச் சென்று வணங்கினார்.
                         உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்”
என கல்வி கற்போர் கட்டுக்கடங்கா சொத்துக்களுக்கு அதிபதி ஆனாலும் பணிந்து கற்க வேண்டும் என்பார் வாய்மொழிப் புலவர். சர்வப்பிள்ளையில் சாதா கிருஷ்ணன் ஆசிரியராக இருந்தவர்,; ஜனாதிபதி ராதாகிருஷ்ணனாக உயர்ந்ததன் பெருமையை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்.

மாணவர்களும் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையையும் வழங்க வேண்டும். மாதா பிதாவுக்கு பிறகு சதா நாளும் நம் மீது அக்கறை எடுத்துக் கொள்பவர்கள் அவர்களே! இன்றைய மாணவர்களில் சிலர் ஆசிரியர்களை பெரும்பாலும் ஓர் ஊழியனாக பார்க்கும் மனநிலை வளர்ந்து வருகிறது. ஏனெனில் நாம் தான் பல ஆயிரங்களை கட்டணமாக செலுத்துகிறோமே என்பதாலா?
நீதியையும், நெறியையும் , பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும், நுண்ணறிவையும், சகிப்புத் தன்மையையும், வீரத்தையும், வெற்றியையும் கலைகளோடும் நுட்பத்தோடும் இணைத்து போதித்தது அன்றைய கல்வி முறை. ஆனால் இன்றைய மெக்காலே கல்வித் திட்டத்தில் பயன் சிலருக்கு இருப்பினும் மாணவர்களை தேர்விற்கு தயார் செய்யும் ஒரு முயற்சி மட்டுமே அதிகமாக முன்னெடுக்கப் படுகிறது. ஏனெனில் இதற்குத்தான் இன்றைக்கு மதிப்பெண்களும் முக்கியத்துவமும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தங்களுக்குள் கடும் போட்டியை ஏற்படுத்திக் கொண்டு பெற்றோர்களின் கூட்டு முயற்சியோடு மாணவர்களை மனநெறுக்கடிக்கு ஆளாக்குவதையே அதிகம் விளைவிக்கிறது.
உண்மைக் கல்வி அதுவல்ல என்பதை புரிந்து கொண்ட கல்வியாளர்களும் , மக்களும், அரசும் இணைந்து திறமான கல்வியை படைக்க முன்வர வேண்டும்.

தற்காலத்தில் சில கல்வி நிறுவனங்கள்- வங்கிளில் சேமிப்பை உயர்த்த வாடிக்கையாளர் சேவை புரிவதைப் போல, மாணவர்கள் பெற்றோர்கள் கவனத்தை ஈர்க்க வாடிக்கையாளர் சேவை புரிந்து வருகின்றன.
ஏனைய தொழில் புரிந்து வருவாய் ஈட்டுவதற்கும் ஆசிரியராக பணியாற்றுவதற்கும் உள்ள அடர்த்தியான வேறுபாட்டை ஆசிரியர்கள் நன்கு உணர்ந்திருப்பர். ஆசிரியர்- மாணவ உறவு மற்றும் புரிதல் புனிதமான ஞானமார்க்கத்திலானது. இது ஆண்-பெண் பாலினம் கடந்து, ஏழை – பணக்கார ஏற்றத் தாழ்வு துறந்து, சாதி- மத வேறுபாடுகள் மறந்து நிர்மலமான அன்பும் கருணையும் தொலை நோக்கும் கொண்டு பார்க்கப்பட வேண்டியது. ஆசிரியராக பணியாற்றுவோர் அதற்குரிய பொறுப்பும் பொறுமையும் கொண்டு பணியாற்றினால்தான் அதிகமான மாணவர்களால் மதிக்கப்படுவர் என்பதறிந்து தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். எதிர்கால சமூகம் ஏற்றம் நிறைந்ததாக மாற்றம் பெற பங்காற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு ஆசியருக்கும் உண்டு என்பதை யாராலும் மறக்க முடியாது. உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு ஆசிரியனிடம் கல்வி பயின்றவனாகவே இருக்கின்றனர்.
உயர்ந்த இடத்தை அடைந்த மாணவர்களுக்காக உரிமை கொண்டாடும் ஆசிரியர்கள்: பல மேல்நிலைப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் இன்னும் கீழ் நிலையில் இருப்பதற்கும் , உயர்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவன் தாழ்நிலையில் உள்ளதற்கும், கல்லூரியில் படித்த இளைஞர்களில் சிலர் - கள் ஊறும் சாலைகளில் சுவைத்து நிற்பதற்கும் சமூகத்தோடு சேர்ந்து பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். நல்ல ஆசிரியர்களும் நடமாடும் தெய்வங்களாக பெற்றோர்களும் இருந்துவிட்டால் நாளைய உலகம் அன்பும் அறிவும் பெற்று ஆக்கமும் அமைதியுமுற்று பண்பும் பரிவும் படைத்து பெருமை கொண்டு புகழ் பேசும். அன்று காவல்துறை உயர் அதிகாரிகளும், சட்ட வல்லுனர்களும் கூட ஆசியராக மாறிவிடுவர் குற்றங்களே இல்லை என்பதால்…..

2 comments: