பா. சக்திவேல்
Friday, 17 February 2017
Thursday, 19 January 2017
உண்மை ஊழியன்
பேராசிரியர் செல்வகணபதி ஐயா ஒரு கூட்டத்தில் கூறிய செய்தி ..
முன்னொரு காலத்தில் ஒரு ஏழை விவசாயி ( விவசாயி என்றாலே ஏழையாக இருப்பான் போலிருக்கிறது) தன்னுடைய மனைவியின் உதவியோடு ஏர் கொண்டு உடலை வருத்தி நிலத்தை உழவு செய்து கொண்டிருந்தார் . அப்போது கரை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளில் இரண்டு சேவை மனதோடு நான் உங்களுக்கு உதவலாமா என்று கேட்டது ..
அதற்கு அந்த விவசாயி உனக்கு கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை. ஆதலால் வேண்டாம் என்று மறுத்தார் . அந்த மாடுகள் விடுவதாயில்லை , எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று கூறி நிலத்தை உழுவதற்கு உற்ற துணைவனாய் உதவியது . உழுதவன் விதைத்தான் , பயிர் வேகமாக வளர்ந்து விளைந்து செழித்தது .
அறுவடை நேரம் நெருங்கியது , கதிர் கட்டுகள் களத்திற்கு வந்து சேர்ந்தன . இப்போது நான் உதவலாமா என்றது மாடுகள் . என்னிடம் கொடுக்க ஒன்றுமில்லை என்றான் விவசாயி . பரவாயில்லை எனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லி தானியங்களை பிரித்தெடுக்க போரடிக்க உதவியது .
குவிந்த நெல்மணிகளை வண்டியில் போட்டு வீட்டிற்கு இழுத்து கொண்டிருந்தான் - இப்போது நான் உதவலாமா என்றது. வழக்கம் போல என்னிடம் கொடுக்க ஒன்றுமில்லை என்றான் விவசாயி. எனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லி தானிய மூட்டைகளை அவன் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தது .
திரும்பி வந்த காளைகளை கண்டான் விவசாயி மனம் கசிந்தது . காளைகள் திரும்பி பார்த்து கேட்டது . விளைந்த மணிகளை வீட்டில் சேர்த்து விட்டேன் . அங்கேயே உங்களுக்கு வேண்டாம் என்று விட்டு வந்த வைக்கோலை நான் உணவாக எடுத்து கொள்கிறேன் .
நெல்மணிகளில் இருந்து அரிசியை நீங்கள் உணவாக எடுத்து கொள்கிறீர்கள். உங்களுக்கு வேண்டாத தவிடை எனக்கு தாருங்கள் என கேட்டது . என்னுடைய உணவு நீங்கள் கொடுத்தது , அதனால் என்னுடைய கழிவுகள் உங்களுக்கு தான் சொந்தம் . அதை உங்கள் வயலுக்கு உரமாக பயன் படுத்தி கொல்லுங்களென்றது .
Friday, 13 January 2017
Pongal
பொங்கல்...
இது
விளைச்சலின் வெகுமதி
விசுவாசத்தின் விலாசம்
உழைப்பின் உன்னதம்
உண்மையின் உள்ளொளி
நன்றியின் நன்கொடை
நன்னெறியின் நற்பரிசு
ஒற்றுமையின் ஔடதம்
ஒப்பற்ற ஓரொலி..
அனைத்துயிரையும் மதித்து போற்றி
ஆதவனைத் துதித்து நிற்கும்
அற்புதத் திருநாள்...
இத்திருநாளை
உலக நாகரிகத்தின் அடையாளமாக
அகிலத்தின் அனைத்து மனித குலமும்
கொண்டாட வேண்டும்..
Sunday, 1 January 2017
மக்காச் சோளம் - மக்கும் உழவன்
மக்காச்சோளம் என்று தான்
பயிர் செய்தான்;
மழைமேகம் கை விட்டதால்-
மக்கியது பயிர் மட்டுமல்ல,
அவன் உயிரும் தான்.
உயிர் வளர்க்க
வரம் சேர்த்தவன் மத்தியில்-
பயிர் செழிக்க உரம் வார்த்தவன்.
வயிறு புடைக்க உணவுண்டானோ இல்லையோ
வயல் மடைக்கு நீர் பாய்ச்ச
தவம் தொடர்ந்தவன்.
வான் மழை மட்டும் வசப்படவில்லை.
வெடித்து பிளந்தது நிலம் மட்டுமல்ல ,
துடித்து நின்ற அவன் உளமும்தான்.
உலகுக்கு உணவளிக்க தன்
உண்டியை சுருக்கி கொண்டவன்.
உழவனுக்கு நீர் அளிக்க
இறைவனுக்கும் ஈரமில்லை,
அயல் மாநிலத்தவனுக்கு மனமில்லை.
தூர் வார ஒதுக்கிய நிதியில்
ஊர் ஓரம் வாங்கிய நிலங்கள் எத்தனை?
ஆகாயத்தாமரை அகற்றும் ஒதுக்கீட்டில்
அள்ளி குவித்த சகாயங்கள் எத்தனை?
கால்வாய்க்கு கரை அமைத்த பொதுப் பணித்துறை,
ஆலவாயன் அமுதுண்டது போல அனைத்தையும்
நீள சுருட்டி நீர்த்துப் போக செய்தது ...
கட்டுமானத்தில் புதிய கலவை விகிதத்தை
98:2 என மணலையும் சிமெண்டையும் சேர்த்து
புதிய தொழில் நுட்பத்தை, ஒப்பந்த காரர்கள்
அறிமுகம் செய்து தன் மானத்தை
காற்றில் பறக்க விட்டார்கள் ....
கணக்கு எழுதிய ஏடுகள்
கனத்து கண்ணீர் வடித்தன,
விவசாயிகளுக்கான துரோகத்தை எண்ணி...
கழனி நிறைய
பழனிக்கு பாத யாத்திரை,
உழுதுண்டு வாழ்ந்ததால் - நிம்மதியற்று
பழுதுற்றது அவன் நித்திரை.
மனப்பிணிக்கு ஏது மாத்திரை ?
ஐயகோ மடிகின்றனர் -
ஆளில்லையா ஆறுதலுக்கு?
சாயக் கொடிகள்
பல்லாயிரம் பாரதத்தில் ..
விவசாயக் குடிகள்
வாழமட்டுமா வழியில்லை.
Saturday, 31 December 2016
புதுசு கண்ணா..
புதிதாய்
பூக்க இருக்கிறது,
வருமாண்டு
வரவாய்
வாரி வழங்க வருகிறது,
தினம் மாண்டு வாழும்
ஏழை நாட்கள்
தித்திக்க திமிருகிறது,
நாடாண்டு
நாடகம் போடுவோர்
நடுநிலை போற்றுவர்,
வீடாண்டு
மனிதம் பேணுவோர்
விபரீதயோகம் காணுவர்,
என்றெல்லாம்
சென்ற ஆண்டு
புத்தாண்டு பலனை பொழிந்தார்
பிரபல நிகழ் கணிப்பாளர் ..
ஆண்டுகள் ஐயாயிராம் ஆனாலும்
அதுவாய் மாறுவது எதுவமன்று .
ஆண்டவன் மாற்றியதை விட
ஆண்டவன் செய்ததே அதிகம் ..
ஆள்பவனை தேர்வு செய்யும்
அடித்தள மக்களே !
இந்த ஆண்டாவது
யோக்கிய தலைமைகள்
உலக நிலப்பரப்புகளை ஆளட்டும் ..
அதை தேர்வு செய்யும் நல்லறிவை
மக்களுக்கு நல்கட்டும் ..
பொறுமை காத்து, காலத்தின்
கணிப்பில் புரண்டது போதும் !
பொங்கி வரும் அலைகளே
எதிர்த்த பாறை மோதும்!
துணிந்து நிற்க முனைந்த பின்
தூக்கம் எதற்கு மனதினில் ..
பணிந்து பார்க்கும் பணியிலும்
அணிந்து செல்வோம் வீரத்தை ..
உழைப்பு உண்டு உடலினுள்
உறுதி நின்ற நெஞ்சத்துள்
களைப்பு ஏது கண்களில்
கருதி நீரும் பார்த்தீரேல் ..
ஆண்டு சுழற்சி ஒரு கணக்கு!
அதுவும் நமக்கு நாமாய் சமைத்தது ..
பிரபஞ்ச இயக்க நெறியில் - இந்த
பிஞ்சு அறிவு எதைக் கண்டது ?
என்ன கணித்தது ?
பால்வெளி வீதியில்
பல்லாயிரம் பகலவன்கள் ..
நம் பூமி அதில் ஒரு தூசு ..
Wednesday, 28 December 2016
அச்சுறுத்தலும் மிச்சமிருத்தலும்
இயற்கை மாபெரும் உணவுச் சங்கிலியை உருவாக்கி ஒவ்வொரு உயிருக்கும் உணவாக்கி வைத்திருப்பது அற்புதத்திலும் அதி அற்புதம் . இதில் ஒரு லட்சத்து எழுபத்து மூன்றாயிரம் யோனி பேதங்களுடன் பல கோடி உயிர்கள் பல்வேறு சிறப்புத் தனித்தன்மைகளுடன் வாழ்ந்து வருகின்றன. இவற்றில் ஒரு உயிரியாக மனிதனும் உருவாகியிருக்கிறான் .
நாளடைவில் மனிதன் மட்டும் சில தந்திர யுக்திகளாலும் நீண்ட அனுபவங்களின் நினைவு திறன் மேம்பாட்டினாலும் அதிக அளவில் மற்ற உயிர்களின் சுதந்திரத்திலும் நிம்மதியிலும் கை வைக்க ஆரம்பித்தான் . உணவுக்காக பறவை , விலங்கு வேட்டையை துவங்கியவன் நிலையான உணவனுக்காக விவசாயம் செய்கிறேன் என்று சொல்லி காடுகளை அளித்து உணவுச்சங்கிலியில் அடித்தட்டு உற்பத்தியாளர்களாக இருந்த மரம் செடிகளை ஒடுக்கி காடுகளை சுருக்கி விலை நிலத்தை பெருக்க முனைந்தான். வணிக நடவடிக்கையாலும் தன் அடாவடித்தனத்தை மற்ற உயிர்களின் மீது அவிழ்த்து விட்டான் .
இதை பார்த்து தான் வள்ளுவர்
" பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை "
என்று தாம் இதுவரை ஆய்ந்த பல்லாயிரம் நூல்களில் இதுவே முதன்மையானதாக சொல்லப்பட்டுள்ளது) என உலகிலேயே " பல்லுயிர் தன்மை " (Biodiversity ) குறித்து முதன் முதலில் பேசினார்.
அடுத்ததாக நமக்கு முந்தைய தலைமுறையில் வந்த பாரதி " காக்கை குருவி எங்கள் சாதி" என்று வழி மொழிந்தான் . ஆனால் இன்று மனிதனின் அதீத ஆசையினாலும் கட்டுப்பாடற்ற ஆக்கிரமிப்பினாலும் இமாலய மலை சாரலிலும் மேற்கு தொடர்ச்சி மலையினிலும் பல அபூர்வ வகை உயிரினங்கள் ( உலகில் வேறெங்கிலும் இல்லாத) அழிந்து வருவதாக உலகில் அழிந்து வரும் உரினங்களின் பதிவு ஏட்டில் (red data book) குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதனின் அத்து மீறலால் வாழ வழியின்றி மீண்டும் அதனுடைய பூர்வீக இருப்பிடத்தை தேடி விலங்குகள் வருவதால் மனித-விலங்கு மோதல்கள் அங்கங்கே அதிகமாகி விட்டது . இதற்கு காரணம் மனிதனின் அசுர வளர்ச்சியும் சகிப்புத்தன்மை குறைபாடும் வியாபார குறுக்கு புத்தியும் ஆகும் . இவற்றிலிருந்து ஏனைய உயிர்கள் தப்பித்து எத்தனை காலம் வாழப் போகின்றதோ ? அவைகளுக்கும் கொஞ்சம் இடம் கொடுப்போம் .
Tuesday, 27 December 2016
பாரதத்தின் சாதனையாளர்கள் ( Achievers of India)
பாரதத்தின் சாதனையாளர்கள்
பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி சாதித்து காட்டியவர்களைத்தான் இன்று பெரும்பாலான தன்னம்பிக்கை பயிற்சி அளிப்பவர்கள் முன்னுதாரணமாக காட்டுகின்றனர் . ஆனால் முறையான தொழில் நுட்பமோ , அறிவியலோ அல்லது கலையோ பயின்று சாதித்து தனது துறையில் தனி த் தடம் பதித்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் . இவர்களை எடுத்து காட்டினால் தான் இளைய தலைமுறைக்கு நேர்மறை எண்ணம் உருவாகும்.
Subscribe to:
Posts (Atom)





