பா. சக்திவேல்

Name

Email *

Message *

Thursday 19 January 2017

உண்மை ஊழியன்


பேராசிரியர் செல்வகணபதி ஐயா ஒரு கூட்டத்தில் கூறிய செய்தி ..
முன்னொரு காலத்தில் ஒரு ஏழை விவசாயி ( விவசாயி என்றாலே ஏழையாக இருப்பான் போலிருக்கிறது) தன்னுடைய  மனைவியின் உதவியோடு ஏர் கொண்டு உடலை  வருத்தி நிலத்தை உழவு செய்து கொண்டிருந்தார் . அப்போது கரை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளில் இரண்டு சேவை மனதோடு நான் உங்களுக்கு உதவலாமா  என்று கேட்டது ..
அதற்கு அந்த விவசாயி உனக்கு கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை. ஆதலால் வேண்டாம் என்று மறுத்தார் . அந்த மாடுகள் விடுவதாயில்லை , எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று கூறி நிலத்தை உழுவதற்கு உற்ற துணைவனாய் உதவியது . உழுதவன் விதைத்தான் , பயிர் வேகமாக வளர்ந்து விளைந்து செழித்தது .

அறுவடை நேரம் நெருங்கியது , கதிர் கட்டுகள் களத்திற்கு வந்து சேர்ந்தன . இப்போது நான் உதவலாமா என்றது மாடுகள் . என்னிடம்  கொடுக்க ஒன்றுமில்லை என்றான்  விவசாயி . பரவாயில்லை  எனக்கு எதுவும் வேண்டாம்  என்று சொல்லி தானியங்களை  பிரித்தெடுக்க போரடிக்க  உதவியது .
குவிந்த நெல்மணிகளை  வண்டியில் போட்டு வீட்டிற்கு இழுத்து கொண்டிருந்தான் - இப்போது நான் உதவலாமா என்றது. வழக்கம் போல என்னிடம்  கொடுக்க ஒன்றுமில்லை என்றான்  விவசாயி.  எனக்கு எதுவும் வேண்டாம்  என்று சொல்லி தானிய மூட்டைகளை அவன் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தது .

திரும்பி வந்த காளைகளை கண்டான் விவசாயி மனம் கசிந்தது . காளைகள் திரும்பி பார்த்து கேட்டது . விளைந்த மணிகளை வீட்டில்  சேர்த்து விட்டேன் . அங்கேயே உங்களுக்கு வேண்டாம் என்று விட்டு வந்த வைக்கோலை நான் உணவாக எடுத்து கொள்கிறேன் .
நெல்மணிகளில் இருந்து  அரிசியை நீங்கள் உணவாக எடுத்து கொள்கிறீர்கள். உங்களுக்கு வேண்டாத தவிடை எனக்கு தாருங்கள்  என  கேட்டது . என்னுடைய உணவு நீங்கள் கொடுத்தது , அதனால் என்னுடைய கழிவுகள் உங்களுக்கு தான் சொந்தம் . அதை உங்கள்  வயலுக்கு உரமாக பயன் படுத்தி கொல்லுங்களென்றது .

Friday 13 January 2017

Pongal


பொங்கல்...
இது
விளைச்சலின் வெகுமதி
விசுவாசத்தின் விலாசம்
உழைப்பின் உன்னதம்
உண்மையின் உள்ளொளி
நன்றியின் நன்கொடை
நன்னெறியின் நற்பரிசு
ஒற்றுமையின் ஔடதம்
ஒப்பற்ற ஓரொலி..

அனைத்துயிரையும் மதித்து போற்றி
ஆதவனைத் துதித்து நிற்கும்
அற்புதத் திருநாள்...
இத்திருநாளை
உலக நாகரிகத்தின் அடையாளமாக
அகிலத்தின் அனைத்து மனித குலமும்
கொண்டாட வேண்டும்..

Sunday 1 January 2017

மக்காச் சோளம் - மக்கும் உழவன்


மக்காச்சோளம் என்று தான் 
பயிர் செய்தான்;
மழைமேகம் கை விட்டதால்- 
மக்கியது பயிர் மட்டுமல்ல,
அவன் உயிரும் தான்.

உயிர் வளர்க்க 
வரம் சேர்த்தவன்   மத்தியில்- 
பயிர் செழிக்க உரம் வார்த்தவன்.

வயிறு  புடைக்க உணவுண்டானோ இல்லையோ 
வயல் மடைக்கு நீர் பாய்ச்ச 
தவம் தொடர்ந்தவன்.

வான் மழை மட்டும் வசப்படவில்லை.
வெடித்து பிளந்தது நிலம் மட்டுமல்ல ,
துடித்து நின்ற அவன் உளமும்தான்.

உலகுக்கு உணவளிக்க தன் 
உண்டியை சுருக்கி கொண்டவன்.
உழவனுக்கு நீர் அளிக்க 
இறைவனுக்கும் ஈரமில்லை,
அயல் மாநிலத்தவனுக்கு மனமில்லை.

தூர் வார ஒதுக்கிய நிதியில் 
ஊர்  ஓரம் வாங்கிய நிலங்கள் எத்தனை?
ஆகாயத்தாமரை அகற்றும் ஒதுக்கீட்டில் 
அள்ளி குவித்த சகாயங்கள்  எத்தனை?

கால்வாய்க்கு கரை அமைத்த பொதுப் பணித்துறை,
ஆலவாயன் அமுதுண்டது போல அனைத்தையும் 
நீள சுருட்டி நீர்த்துப் போக செய்தது ...

கட்டுமானத்தில் புதிய கலவை விகிதத்தை 
98:2 என மணலையும் சிமெண்டையும் சேர்த்து 
புதிய தொழில் நுட்பத்தை, ஒப்பந்த காரர்கள் 
அறிமுகம் செய்து தன் மானத்தை 
காற்றில் பறக்க விட்டார்கள் ....

கணக்கு எழுதிய ஏடுகள் 
கனத்து கண்ணீர் வடித்தன,
விவசாயிகளுக்கான துரோகத்தை எண்ணி...

கழனி நிறைய 
பழனிக்கு  பாத யாத்திரை,
உழுதுண்டு  வாழ்ந்ததால் - நிம்மதியற்று 
பழுதுற்றது  அவன் நித்திரை.
மனப்பிணிக்கு ஏது மாத்திரை ?
ஐயகோ மடிகின்றனர் -
ஆளில்லையா ஆறுதலுக்கு? 

சாயக் கொடிகள் 
பல்லாயிரம் பாரதத்தில் ..
விவசாயக் குடிகள் 
வாழமட்டுமா வழியில்லை.